கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இன்று கோவை விமான நிலைய பயணிகள் வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை விமான நிலைய பயணிகள் வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தனியார் விமான நிறுவன நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கோவை அவினாசி சாலையில் விமான நிலையம் வரையிலான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக்கம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறியதாவது:-
"சாலை விரிவாக்கம் சம்பந்தமான ஆலோசனைகளை நான் முன்வைத்தேன். இதனை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்".
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.