தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும் நோக்கில் முதல் முறையாக உலக மகளிர் தினமான மார்ச் 8 முதல் பெண்கள் பிரிவு பிரத்தியேகமாகத் துவக்கப்பட்டுள்ளது.
கோவை: நாடு முழுவதும் குறு, சிறு தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு உதவி வரும் 'லகு உத்யோக் பாரதி' அமைப்பு சார்பில், உலக மகளிர் தினத்தன்று பெண்களுக்கென பிரத்யேக பிரிவு துவக்கப்பட்டது.
ஆவாரம்பாளையம் ரோடு கோவை இந்தியா வளாகத்தில் நடந்த துவக்க விழாவில், 'லகு உத்யோக் பாரதி' அமைப்பின் மாநிலத் தலைவர் விஜயராகவன், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின், இயக்குனர் மற்றும் 'லகு உத்யோக் பாரதி, தமிழ்நாடு, துணைத்தலைவர், கல்யாணசுந்தரம், இணை பொதுச்செயலாளர், எம். சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தற்போது தொழில் நடத்தி வரும் பெண் தொழில் முனைவோர் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் மற்றும் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்களுக்கு தொழில்துறையில் சாதனை படைக்க உள்ள வாய்ப்புகள் குறித்தும் மத்திய மாநில அரசு சார்பில் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் குறித்தும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
'லகு உத்யோக் பாரதி' அமைப்பு அகில இந்திய சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான ஒரு அமைப்பாகும். தொழில் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

துவக்கத்தில் சென்னை, கோவை மற்றும் திருப்பூரில் மட்டுமே கிளைகள் கொண்டு செயல்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் காரணமாக 14 மாவட்டங்களில் எங்கள் தொழில் அமைப்பின் கிளைகள் துவக்கப்பட்டு மொத்த கிளைகள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 1,700 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும் நோக்கில் முதல் முறையாக உலக மகளிர் தினமான மார்ச் 8 முதல் பெண்கள் பிரிவு பிரத்தியேகமாகத் துவக்கப்பட்டுள்ளது.