விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கக்கூடிய பகுதியில் சிப்காட் தொழில் வளாகம் அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசு மற்றும் மக்களுக்கு உடல்நலக்குறைவு வரக்கூடும் என்றனர்.
திருப்பூர்: அவிநாசி தாலுக்கா கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் சிப்காட் தொழில் பூங்கா அமையாது என அரசாணை மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவில் இருக்கக்கூடிய தத்தனூர் ஊராட்சி, புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, புலிப்பார் ஊராட்சி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் சுற்றுவட்டாரம் முழுவதும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் தான் பிரதானமாக உள்ளது.
இந்நிலையில், தத்தனூர் ஊராட்சியில் சிப்காட் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது அந்த ஊராட்சியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் பலமுறை மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியதன் பலனாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிப்காட் ரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், கடந்த மாதம் சிப்காட் சம்பந்தமாக மறு ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்து நில அளவீடு செய்துள்ளனர். தற்பொழுது ஆய்வு செய்துள்ள புதிய பரப்பளவிற்கு உட்பட்ட இடத்தில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் ஐந்தாவது நீரேற்று நிலையம் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கக்கூடிய பகுதியில் சிப்காட் தொழில் வளாகம் அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்களுக்கு உடல்நலக்குறைவு வரக்கூடும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் திட்டம் ரத்து செய்து சிப்காட் அமையாது என அரசாங்கம் தெளிவுபடுத்தி அரசு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.