குப்பைக் கிடங்கில் இரண்டு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகளை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி 5ம் தேதியிலிருந்து நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது அங்கிருந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது.
இதனிடையே, குப்பைக் கிடங்கின் மற்றொரு பகுதியில் தீ பிடித்ததால், தெற்கு தீயணைப்பு நிலையம், மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 3 வாகனம் மூலம் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாகக் காணப்பட்டது.