கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை பேரூராட்சித் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் வாக்கு பெட்டி சாலையில் வீசப்பட்டதால் துணை தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை பேரூராட்சித் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் வாக்கு பெட்டி சாலையில் வீசப்பட்டதால் துணை தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே இன்று காலை மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பதட்டமான சூழல் உருவானதை தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் தேர்தல் மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலானது நடைபெற்றது. அப்போது, துணைத் தலைவர் தேர்தலுக்கு அதிமுக சார்பில் கணேஷ் என்பவரும், திமுக சார்பில் பவித்ரா என்பவரும் போட்டியிட்டனர். துணைத்தலைவர் தேர்தல் துவங்கியது முதலே, திமுக மற்றும் அதிமுக இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவியது.
இந்நிலையில் தேர்தல் அலுவலக வளாகத்திலிருந்து வாக்குப் பெட்டியினை அரசியல் கட்சியினர் தூக்கி வெளியில் வீசினர். இதனை தொடர்ந்து சூழல் மேலும் பதட்டமடைந்ததால், தொடர்ந்து தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அப்பொழுது, மீண்டும் தேர்தல் அலுவலகத்திற்குள் சென்ற திமுகவினர் வாக்கு பெட்டியை தூக்கி சாலையில் வீசி, வாக்கு சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து, வெள்ளலூர் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார். 15 வார்டுகள் கொண்ட வெள்ளலூர் பேரூராட்சியில் திமுக 6, சுயேட்சை 1, அதிமுக 8 என கவுன்சிலர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், நீதிமன்றம் செல்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும், துணை தலைவர் தேர்தலின் போதும் வன்முறையில் ஈடுபட்டதால் வெள்ளலூர் வாக்காளர்கள் மத்தியில் சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.