வெள்ளலூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக - அதிமுக வினரிடையே ஏற்பட்ட மோதலால் மறு மறைமுக தேர்தல் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனுத் தாக்கல் செய்தார்.
கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அப்பேரூராட்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் 8 பேருடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோரிடம் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்:-
கோவையில் வெளியூர் நபர்களை வைத்து திமுகவினர் வன்முறை நடத்துகின்றனர் என தெரிவித்தார். முறைகேடான வகையில் அதிமுகவின் வெற்றியை பறித்தார்கள் எனவும் கூறினார்.
வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களை கத்தி, கம்புடன் வந்து தாக்கி இருக்கின்றனர் எனவும், காரை சேதப்படுத்தி இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டிய அவர், இந்த தேர்தல் வன்முறைகள் கோவைக்கு புதுமையாக இருக்கின்றது என தெரிவித்தார்.
எனவே, வெள்ளலுர் பேரூராட்சி தேர்தலைத் தள்ளி வைத்து இருக்கின்றனர் எனவும், இது நியாயமே இல்லை எனவும் கூறிய அவர், வெள்ளலூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரையும் ஆட்சியர் முன்னிலையில் நிறுத்தி இருக்கின்றோம்.
அதிமுகவினரை தாக்கிவிட்டு திமுகவினர் காவல் துறையில் பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர். அடித்துவிட்டு அவர்களே பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
வெள்ளலூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.