சாதி மறுப்பு திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து திருமணம் முடித்த காதல் ஜோடியை காரில் கடத்திய விவகாரத்தில், உயிர் பாதுகாப்பு வேண்டும் எனவும் கத்தியை காட்டி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதலர்கள் பேட்டியளித்துள்ளனர்.
கோவை: கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியைப் பெண் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது இருவரும் கதறி அழுது கூச்சல் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பரும், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்பவரும் கடந்த 8 வருடமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரியவந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 1-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அப்போது இரு வீட்டாரையும் அழைத்துப் பேசி சமாதானம் படுத்தி அனுப்பியுள்ளனர்.
அப்போது இரு தரப்பும் சரின்னு சொல்லிவிட்டுச் சென்றதாகவும், பெண் வீட்டார் நேற்றிரவு 10 க்கு மேற்பட்டவர்கள் காரில் கத்தியைக் காட்டி மிரட்டி அடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது கார் லட்சுமிமில் சாலையில் செல்லும்போது தான் பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்து தப்பித்து வெளியே வந்து சத்தம் போட்டதால் தப்பித்தோம் என தெரிவித்துள்ளனர்.
காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் 4 மணி நேரத்திற்கு மேலாகப் பெற்றோர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காதலர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டியும் எங்களைக் கொலை முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேட்டியளித்துள்ளனர்.