நாளை கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் 19வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
கோவை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 100 வேட்பாளர்கள் நேற்று கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், நாளை கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் 19வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தற்போது, மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கல்பனா பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். இவரது கணவர் ஆனந்தகுமார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து, இருவரும் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகின்றனர்.
மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கல்பனா கூறும்போது, தான் கட்சியில் மூன்று தலைமுறைகளாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
மேலும், முதல்முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது கட்சி மேலிடம் வாய்ப்பு கொடுத்தது.

தற்போது, வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ள நிலையில் கட்சித் தலைமை மேயர் வேட்பாளராகவும் ஒரு சாமானியனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தனக்கு தேர்தல் பணியாற்றிய தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மேயராக பொருப்பேற்றால் இரவு, பகல் பாராமல் பணியாற்ற தயாராக உள்ளதாகவும், கல்பனா தெரிவித்தார்.