ரூ.2.5-கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயல்வதாக, பெண் புகார் மனு அளித்த நிலையில், அடிப்படை ஆதாரமற்ற பொய் புகாரை அளித்துள்ளதாக, சமந்தப்பட்ட வழக்கறிஞர், மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.
கோவை: நேற்று கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்த திலகவதி என்ற பெண், தன் பொறுப்பில் உள்ள ரூபாய். 2.5 கோடி நிலத்தை, அடமான கடன் கொடுத்தவர் மற்றும் அவருடன் சேர்ந்து சிலர் அபகரிக்க முயல்வதாகவும், 11 லட்சம் கடன் கொடுத்து விட்டு, இப்போது ரூபாய். 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில், இன்று அந்த பெண்ணின் புகாருக்கு பதில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் வழக்கறிஞர் சிவக்குமார் அளித்த புகார் மனுவில், "அடிப்படை ஆதாரமற்ற ஒரு பொய் புகாரை தன் மீது கொடுத்தும், அதனை சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுவதாக", அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்த திலகவதி என்ற பெண், என்னை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் அணுகி, தன் மீது கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், அந்த வழக்குகள் சம்மந்தமாக தனது சார்பில் என்னை ஆஜராக, கடந்த ஆகஸ்ட் 2020, கொரோனா கால கட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
அந்த நேரத்தில், அவர் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில், இவருக்குச் சொந்தமான சொத்துக்கள் எதையும் இவர் அடமானம் வைக்கவில்லை. மாறாக, கோவை காந்திபார்க் அருகில் உள்ள ஏ.கே.நகரைச் சேர்ந்த டவுலத் ராம் குமார் சுபாஷ் என்பவரின் சொத்துக்களைத் தான் இவர் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது.
மேற்படி, டவுலத் ராம் குமார் சுபாஷ் தன்னை ரூப் குமார் என்று கூறி சொத்துக்களைப் பதிவு செய்தது எனது ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டேன்.
மேலும், திலகவதி அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள இடம் சாயிபாபா காலனி, பாரதி பார்க் 8 வது கிராஸில் 2-3/4 செண்ட் அளவு கொண்ட ஆர்.சி.சி.வீடு மேற்படி சுபாஷ்க்கு சொந்தமானது. அதனை மேற்படி சுபாஷ் "Xtacy International" என்ற நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தார். அதன் வாடகைதாரர் சுஜிதா என்பவர். மேற்படி, வீட்டை சுபாஷ் திலகவதிக்கு ஒரு பொது அதிகார ஆவணம் மூலம் ஒப்படைத்திருந்தார்.
அந்த பொது அதிகார ஆவணப் பத்திரத்தை வைத்து சுஜீதாவை காலி செய்ய என்னிடம் திலகவதி கோரினார். இது குறித்து சுபாஷிடம் கேட்க போது, சுபாஷ் அவர்களும் சுஜீதாவை காலி செய்ய வேண்டும் என்றார்.
நான் வழக்கறிஞர் என்ற முறையில் சுஜீத்தாவை காலி செய்ய அணுகிய போது, அவர் நான் வீட்டின் உள் கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் செலவு செய்துள்ளேன். அதனை முன் பணமாக உரிமையாளர் சுபாஷ் ஏற்றுக் கொண்டதாகவும், அதனை திருப்பிக் கொடுத்தால் நான் காலி செய்கிறேன் இல்லாவிட்டால் நான் நீதிமன்றத்தை அணுகுவேன், என்று கூறினார்.
மேற்படி தகவலை, திலகவதி, சுபாஷ் ஆகிய இருவரிடமும் கூறி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் நான் சுஜீதாவிற்கு ரூ.3,50,000/- என்று பேசி முடிவு செய்து அதை மேற்படி இருவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டு, சுஜீதாவிடம் பணத்தை ரொக்கமாகக் கொடுத்துவிட்டு ரசீதும் பெற்றுக் கொண்டேன். பின்பு அவா் வீட்டை காலி செய்து என்னிடம் ஒப்படைக்க அதன் சாவியை நான் திலகவதியிடம் கடந்த 12.02.2020 ஒப்படைத்துவிட்டேன்.
அப்போது, கொரோனா காலகட்டம் என்பதால் தற்போது என்னிடம் பணம் இல்லை. ஆகவே இந்த கட்டிடத்தை யாருக்காவது ரூ.10,00,000/- போக்கியத்திற்கு விட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதை உரிமையாளர் சுபாஷ்ஷிடம் நான் தெரிவித்து ஒப்புதல் பெற்றேன். பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ம.மகுடபதி அந்த கட்டிடத்தினை அலுவலக பயன்பாட்டிற்காகவும், வீடாகவும் தங்கிக் கொள்வதற்காக ரூ.10,00,000/- ரொக்கமாக கொடுத்து 02.02.221 முதல் 3 (மூன்று) ஆண்டுகளுக்கு போக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டார்.
தற்போது, கீழ்தளத்தில் உள்ள போக்கிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டிடத்தை அலுவலக பயன்பாட்டுக்கு வைத்துள்ளார். மேல்தளம் உரிமையாளர் சுபாஷ் அவர்களின் மனைவி லேனாவின் சுவாதீனத்தில் யோகா சென்டருக்கு வாடகைக்கு விட்டு இன்று வரை அவர் சுவாதீனத்தில் இருந்து அவர் வாடகை பெற்று வருகிறார்.
அதன் பின்னர், பலர் என்னிடம் திலகவதியின் வழக்கறிஞர் நாங்கள் தானே என்று தொலைபேசியிலும், நேரிலும் வந்து காவல் நிலையத்தில் திலகவதியின் மீது அளித்த புகார் பற்றி என்னிடம் தெரிவித்தார்கள். நிலமை இவ்வாறிருக்க திலகவதி உண்மைக்கு புறம்பாக எந்த அடிப்படை ஆதாரம் இல்லாமல் என் மீது நிலஅபகரிப்பு புகார் அளித்துள்ளார்.
கீழ்த்தளத்தில் உள்ள வீடு மட்டுமே 3 (மூன்று) ஆண்டுகளுக்குப் போக்கிய ஒப்பந்தம் உள்ளதால் வழக்கறிஞர் பயன்படுத்தியுள்ளார்.2020 ஆகஸ்ட் மாதம் நான் அவருக்கு வழக்கறிஞராக இருந்து வந்த நிலையில், புகார்தாரர் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு 6-மாத காலமாக ஆளும் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் நில அபகரிப்பு போன்று ஒரு பொய் புகார் அளித்துள்ளார்.
அரசின் மீது மக்களின் நல்லெண்ணத்திற்குத் தீங்கு ஏற்பட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சில எதிர் கட்சியின் தூண்டுதலால் அவரைப் பயன்படுத்தி, காழ்புணாச்சி காரணமாக 01.03.2021 அன்று புகார் அளித்துள்ளார்.
மேற்படி, புகார் முழுவதும் உண்மைக்குப் புறம்பானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். போக்கிய ஒப்பந்தம் சம்பந்தமாக முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதாலும், போக்கிய பணம் உரிமையாளரிடம் சென்று சேரவில்லை என்று அவர் கூறியதன் பேரில், பொது அதிகாரம் பெற்ற திலகவதி மீது போக்கிய பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து உள்ளோம்.
எனவே, மாநகர காவல் ஆணையாளர் இந்த புகாரை விசாரித்து சைபர் கிரைம் மூலம் முறையற்ற வகையில் புகார் செய்த புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் புகார் மனுவில், வழக்கறிஞர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.