பல லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள் மற்றும் தேயிலை தொழிற்சாலை உபகரணங்கள் எரிந்த சம்பவம், கப்பட்டி கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
கோத்தகிரியிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கப்பட்டி கிராமம். இங்கு தனியார் ஆரஞ்சு வேலி தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இரவு நேர தேயிலை அரைக்கும் பணியில் நேற்று இரவு ஆறு பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், கணிமைக்கும் வேளையில் மளமளவெனத் தொழிற்சாலை முழுவதும் தீ பரவ தொடங்கியது உடனே இரவு நேர பணியில் இருந்த பணியாளர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தேயிலை தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாகத் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொழிற்சாலையில் தேயிலை தூள் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் அடுப்பிலிருந்து தீ பரவியதா? அல்லது மின்கசிவு காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
அதிர்ஷ்டவசமாகக் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் பணி செய்ததால் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி தொழிற்சாலையை விட்டு உடனே வெளியேறி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.