பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால் காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிமுக 9-சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் சுமார் ஏழு மணி நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: இன்று மதியம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் ஏழு மணி நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவினரைக் கண்டித்து இன்று காலை முதல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டமானது தொடரப்பட்ட நிலையில் காவல்துறையினர் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால் காவல்துறையினர் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட அதிமுக 9 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர், சுமார் ஏழு மணி நேரத்திற்கு பின் ராம்நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

நகர்புற தேர்தலை நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனநாயக முறையில் போராடினோம். ஆனால், காவல்துறை எங்களை கைது செய்துள்ளனர். தேர்தல் விதிக்கு எதிராகவும், கோவையில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு, ஆதரவாக காவல்துறை உள்ளது.
மேலும், தேர்தல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என அதிமுகவினர் நினைக்கிறோம், ஆனால், வெளியூரில் இருந்து இறக்கப்பட்ட திமுகவினர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கத்தி குத்து, அடிதடி நடைபெற்று வருகிறது.
தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குண்டர்களை வைத்தும் , ஜனநாயக படுகொலை செய்து தேர்தலை திமுகவினர் சந்தித்து வருகின்றனர்.
மேலும், நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளை தாமதம் படுத்தாமல் யார் வெற்றி பெற்றார்களே அவர்களை அறிவிக்க வேண்டும் எனவும் மாற்றி அறிவிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும் கூடுதலாக தேர்தல் அதிகாரி நாகராஜன் ஐ.ஏ.எஸ் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய செயல்பாடும் வந்தால்தான் தெரியும் என்று தெரிவித்தார்.