இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர், தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பன்னிமடை அருகே உள்ள வரப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்த மான தோட்டம் உள்ளது. அதில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் 3 காட்டு யானைகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து குழை தள்ளிய வாழை மரங்களை தின்றுள்ளது.
அதில் ஒரு ஆண் யானை தோட்டத்தில் போடப்பட்டுள்ள மின் கம்பியை துதிக்கையில் பிடித்தவாறு மேட்டில் ஏற முயன்றுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பின்னர், தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர், தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மின்சாரம் தாக்கி இறந்த இந்த ஆண் யானை சுமார் 12 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் வனத்துறை உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் வனவர் பழனிவேல் ராஜ மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்துள்ளனர்.
கடந்த 4 நாட்கள் முன்பு பெரியதடாகம் பகுதியில் ஒரு பெண் யானை நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.