இது போன்ற செயலியை பயன்படுத்தி நூதன முறையில் வழிப்பறி செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கோவை: கோவையில் Grindr App என்கிற டேட்டிங் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் துடியலூர் மற்றும் தடாகம் காவல் சரகம் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மொபைல் போன் மற்றும் பைக் காணாமல் போனது சம்மந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனநாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் காட்வின் (19)S/O ஜெயக்குமார், அஸ்வின் (19)S/O சண்முகம், சுரேஷ் (33)S/O செல்வம், பிரபாகரன் (24) S/O ரமேஷ் குமார் மற்றும் விக்கி @ விக்னேஷ் (23) S/O ராமு ஆகியோர் சேர்ந்து Grindr App என்கிற டேட்டிங் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் திருடியது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பயன்படுத்திய Grindr App-ல் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ளவரின் புகைப்படம், இருப்பிடம் மற்றும் அவர்களின் முழு விபரமும் இச்செயலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த விபரங்களை பயன்படுத்தி மேற்படி குற்றவாளிகள் விருப்பம் உள்ளவர்களை தேர்வு செய்து அவர்களிடம் நட்பாக இணையதள வாயிலாக பேசி, ஆசை வார்த்தைகளை கூறி, அவர்களை நேரில் வரவழைத்து, இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களை அடித்து மிரட்டி பின்பு அவர்களிடமிருக்கும் விலைமதிப்புமிக்க போன், பைக், நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அனுப்பியுள்ளனர்.
எனவே மேற்படி குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து மொபைல் போன்-1, இரண்டு பவுன் தங்கச் செயின் மற்றும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பறித்துச் சென்ற ரூபாய் 40,000/-ஆகியவற்றை பறிமுதல் செய்தும், மேற்படி குற்றவாளிகளில் பிரபாகரன் மற்றும் விக்கி@ விக்னேஷ் ஆகியோரை சாயிபாபா காலனி காவல் நிலைய கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மற்ற மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது:-
இது போன்ற செயலியை பயன்படுத்தி நூதன முறையில் வழிப்பறி செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் ஏதேனும் செயலியை பதிவிறக்கம் செய்யும் போது கவனமுடன் இருந்திட வேண்டும் என்றும் இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.