5-பேரை தாக்கிய சிறுத்தை அவிநாசி அருகிலிருந்து தப்பித்து திருப்பூர் மாநகரில் நுழைந்து பனியன் கம்பெனி ஒன்றில் மீண்டும் 2-பேரை தாக்கியது. சிறுத்தை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இருப்பதால் விரைவில் பிடித்துவிடலாம் என்று கருதப்படுகிறது.
திருப்பூர்: அவிநாசி அருகிலிருந்து தப்பித்த சிறுத்தை திருப்பூர் மாநகரில் நுழைந்து பனியன் கம்பெனி ஒன்றில் 2 பேரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகில் உள்ள பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. சோள காட்டில் பதுங்கியிருந்த அந்த சிறுத்தை அந்தப் பகுதியில் இரண்டு நாட்கள் ஐந்து பேரைக் காயப்படுத்தியது.
இதையடுத்து, நேற்று திருப்பூர் பொங்குபாளையம் அருகில் விவசாய நிலங்களும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பகுதியில் அந்த சிறுத்தை புகுந்து, நாய் ஒன்றை அடித்துச் சாப்பிட்டு விட்டு சாவகாசமாகப் பாதி இறைச்சியை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டது.
வனத்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் சிறுத்தை நேற்று இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை இன்று காலையும் கிடைக்காமலிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அந்த சிறுத்தை திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள அம்மாபாளையம் எனும் இடத்தில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றுக்குள் புகுந்தது.
அந்த பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரைக் கடித்துக் குதறியது. மேலும் இந்த தகவல் கேள்விப்பட்டு சிறுத்தையைப் படிப்பதற்காக அங்கு வந்த வேட்டை வேட்டை தடுப்பு காவலர் பிரேம் குமார் என்பவரை சிறுத்தை தாக்கியது.
இதில் இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு உள்ளார்கள்.
இதில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பொதுமக்களை வெளியே அனுப்பிவிட்டு, பனியன் கம்பெனியில் கேட்டை பூட்டிவிட்டு உள்பக்கமாகத் தேடுதல் பணி நடந்து வருகிறது. சிறுத்தை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இருப்பதால் விரைவில் பிடித்துவிடலாம் என்று கருதப்படுகிறது.