கோவை நம்பர்.4 வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயராமன் இல்லத்தில் வருமானத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, எம்.எல்.ஏ - அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி ஆகியோர் வந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள 4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2001 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்த அதிமுகவை சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற வருமானத்துறை சோதனை அதிமுகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவரது ஆட்சி காலத்தில் வருமானத்தை விட அதிகமாக ரூ.1.45 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்த சொத்து மற்றும் நகைகள் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து, இன்று அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவரது இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.
அப்போது, அங்கு குடியிருந்த அதிமுகவினர், "திமுக ஒழிக..." என கோஷங்களை எழுப்பினர்.