அருண் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் செய்த குற்றச் செயல்களால் ஏற்பட்ட பொது ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை: கோவை வெள்ளலூர் அருகே கடந்த 8 ஆம் தேதி தந்தை பெரியார் சிலை மீது 2 மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து, காவி பொடியை தூவி சென்றனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, பெரியார் சிலையை அவமதிப்பு செய்தது வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் என்று தெரியவந்தது. கடந்த 11 ஆம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இந்த இரு நபர்கள் செய்த குற்றச் செயல்களால் ஏற்பட்ட பொது ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறையில் உள்ள மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் இருவருக்கும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறித்தான உத்தரவு நகல் கொடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.