கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றவே வடமாநில தொழிலாளர்கள் விரும்புகின்றனர். தேவையற்ற வதந்தி, பீதி ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றவே வடமாநில தொழிலாளர்கள் விரும்புகின்றனர். தேவையற்ற வதந்தி, பீதி ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா மூன்றாவது அலை மற்றும் 'ஓமிக்ரான்' வைரஸ் பரவிவரும் போதிலும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து தங்கி பணியாற்றவே விரும்புகின்றனர் என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின்(COSMAFAN) தலைவர், ஏ. சிவசண்முககுமார் கூறியதாவது,
"கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று விட்டனர்.
மீண்டும் பல மாதங்களுக்குப் பிறகு கோவை திரும்பிய அவர்கள் தொழில் நிறுவனங்களில் வழக்கம் போல் பணியாற்றத் தொடங்கினர். உற்பத்தி தொழில் நிறுவனங்கள் நோய்த்தொற்று பரவல் ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் 'ஓமிக்ரான்' வைரஸ் பரவல் தொழில் துறையினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும்(80%) பவுண்டரி தொழிற்சாலைகளில் தொடர்ந்து பணியாற்றவே தொழிலாளர்கள் விரும்புகின்றனர். எதிர்வரும் நாட்களில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் 'ஓமிக்ரான்' வைரஸ் பரவல் மிகவும் அதிகரித்தால் சொந்த ஊர்களுக்குச் செல்வது குறித்து யோசிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது யாரும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மனநிலையில் இல்லை." இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலாளர்கள் பீதியடையத் தேவையில்லை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்(TEA) தலைவர், ராஜா எம். சண்முகம் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா மூன்றாவது அலை மற்றும் 'ஓமிக்ரான்' வைரஸ் பரவல் உள்ளபோதிலும் மிகவும் பீதி அடையும் அளவுக்கு நிலைமை இல்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளது.
தொழில் நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைச் சரிவர பின்பற்றுவது என்பது உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டாவது அலை நோய் தொற்று பரவலின் போது ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலை தற்போது இல்லை. எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என நம்புகிறோம். நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டாலும் தனிமைப்படுத்துதல், சரியான மருத்துவ முறை மூலமே நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்து விடலாம்.
இன்றைய சூழலில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மனநிலையில் இல்லை. பொங்கல் பண்டிகை காரணமாகத் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி பணியாற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி சென்று வருகின்றனர்.
இதைப் பார்த்து வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதாகத் தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு வதந்தி மற்றும் பீதி ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்பதை தெளிவாகக் கூறியுள்ளது. எனவே தொழிலாளர்கள் பீதியடையத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.