ரூபாய் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 496 இழப்பீடு தொகை அளிக்கப்பட்ட உத்தரவை மதிக்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கோவை: கோவையில் விபத்து ஏற்படுத்தியதால் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத சேலம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கோவை ஆர்.எஸ். புரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45), இவர் கடந்த 2016 மே மாதம் 5ம் தேதி சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பலியானார்.
இதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு அளிக்க வேண்டும் என சந்திரசேகரின் மனைவி பிரபா என்பவர் கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரூபாய் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 496 இழப்பீடு தொகை அளிக்க உத்தரவிட்டார். ஆனால் இந்த தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் தரவில்லை.
இதையடுத்து, இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி நேற்று காந்திபுரத்தில் இருந்து சேலம் செல்ல நின்ற குளிர்சாதனப் பேருந்தை கோர்ட் அமீனா மூலம் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.