மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டில் உள்ள பீரோ, மேசை, பாத்திரங்களுடன் வந்து வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டுப் பொருள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி - லட்சுமி தம்பதியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டில் உள்ள பீரோ, மேசை, பாத்திரங்களுடன் வந்து வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
கருப்பு சாமியின் அண்ணன் தங்களை வாழவிடாமல் இடையூறு செய்ததாகவும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி குடிசையை எரித்து விட்டதாகவும் இதனால் தங்களின் ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் பாழாகிவிட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டனர்.

குறிப்பாக, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்களுக்கு ஒரு தீர்வு தர வேண்டும் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அந்த மினிடோர் வாகனங்களை அப்புறப்படுத்தினர்.