தமிழக முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து காணொளி வாயிலாக இந்த நிகழ்வினை துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் 41 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து காணொளி வாயிலாக இன்று 5 மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் பெறுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார். அந்த 5 மாவட்டங்களில் கோவை மாவட்டமும் ஒன்றாகும்.
இந்நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

முதல்வர் அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவையில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தில் உள்ள 1068 சுய உதவிக் குழுக்களுக்கு 41.31 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்டம் வழங்கப்பட்டது. இதில் 12,816 உறுப்பினர்கள் கலந்து கொண்டு உதவிகளை பெற்றுக்கொண்டனர்.

கலையரங்க நுழைவாயிலில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், சிற்றுண்டிகள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.