மஃப்டியில் இருந்த காவலர் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநரும், ஓட்டுநர் தன்னைத் தாக்கியதாக காவலரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் பேருந்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் திருப்பூர் தெற்கு நிலையை காவலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் போக்குவரத்து கிளைப் பணிமனையில் பணிபுரிந்து வரக்கூடிய அரசு பேருந்து ஓட்டுநர் வடிவேல் நேற்று வழக்கம்போல பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு பேருந்தை இயக்கி வந்துள்ளார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தும் போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டுமென மப்டியில் இருந்த திருப்பூர் தெற்கு நிலையை காவலர் சதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் மப்டியில் இருந்த காவலர் சதிஷ்குமார் ஓட்டுநர் வடிவேலை தாக்கியதாகவும், அதில் மூக்கு மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல் வாக்குவாதம் ஏற்பட்டதில் அரசு பேருந்து ஓட்டுநர் வடிவேல் காவலர் சதிஷ் குமாரை தாக்கியதாகவும், இதில் தான் காயமடைந்துள்ளதாக காவலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ஓட்டுநர் வடிவேல் மற்றும் காவலர் சதீஷ்குமார் இருவரும் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.