பிரிவினை வாதம் பேசுபவர்கள் மீது எப்போதுமே திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற மாரிதாஸின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: யூடியூபர் மாரிதாஸை கைது செய்ததற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;-
இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுக்கு ஏற்பட்ட இந்த பெரும் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகம் காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட யூடியூபர் விமர்சகர் மாரிதாஸ் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது.
மாரிதாஸை அவசர அவசரமாக கைது செய்த காவல்துறையினர், முப்படை தலைமை தளபதி மரணத்தை கொண்டாடியவர்களையும், நமது ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டவர்களையும் கைது செய்யவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மட்டுமல்ல, பிரிவினை வாதம் பேசுபவர்கள் மீது எப்போதுமே திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இது, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற மாரிதாஸின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
திமுகவின் கொள்கையும் திமுக அரசின் செயல்பாடுகளையும் மிக கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்தப் பின்னணியில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாகப் பேசும் கட்சி திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
தங்களை எதிர்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும். மாரிதாஸ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.