அதனை தொடர்ந்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட டிரக்குகளில் இறந்தவர்களின் உடல்கள் கோவை சூலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து தலைநகர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
நீலகிரி: குன்னூர் எம்.ஆர்.சி ராணுவ வளாகத்தில் 13 ராணுவ வீரர்கள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு நேற்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர் கோவை சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
இதனிடையே, ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் பலியாகினார். ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் இறந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் வந்தார். அங்கு ராணுவ பயிற்சி கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன் 15 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் தனியார் விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பின்னர், அதிகாலை நேரத்தில் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை தனி தனியாக பெட்டிகளில் வைக்கும் பணியை விரைவுபடுத்தினர். தொடர்ந்து, காலை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட ராணுவ டிரக்குகளில் மருத்துவமனைக்கு வந்தது.
அதனை தொடர்ந்து, இறந்த ராணுவ வீரர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக அந்த டிரக்குகளில் ஏற்றினர். பின்னர் அந்த ராணுவ டிரக்குகள் வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக எம்.ஆர்.சி ராணுவ மையத்திற்கு வந்தன. அங்கு ராணுவ வீரர்களின் உடல்கள் இறக்கி வைக்கப்பட்டன.
பின்னர் ராணுவ வீரர்களின் உடல்கள் அஞ்சலி செலுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டது. முதலில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட டிரக்குகளில் இறந்தவர்களின் உடல்கள் கோவை சூலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து தலைநகர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.