கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் அரியர்ஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில் பல பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் அரியர்ஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில் பல பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 12 பாடப்பிரிவில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக 14 கல்லூரிகள் மற்றும் 19 உறுப்புக் கல்லூரிகள் என 44 கல்லூரிகளில் வேளாண்மை படிப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் தேர்வு எழுதிய மாணவர்களில் பல மாணவர்கள் தோல்வி அடைந்ததாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்வை ஆன்லைன் மூலமாகவும், செய்முறை தேர்வை நேரடியாகவும் மாணவர்கள் எழுதி இருக்கும் நிலையில், தேர்வு முடிவுகளில் எந்த பாடத்திலும் மதிப்பெண் குறிப்பிடப்படாமல், தோல்வி என்று பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டி, இதற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கலைத்தனர்.
தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்திற்குள் துணைவேந்தர் அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண் குறிப்பிடப்படாமல் தோல்வி என அறிவிக்கப்பட்டதை வாபஸ் பெற்று, முறையான தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து, பல்கலைக்கழக தேர்வு துறை அதிகாரிகளோடு மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.