ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை: ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த செய்தி அறிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முதல்வர் அறிவுறுத்தினார்.
பல வகையான வைரஸ் உருமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனாவும் உருமாறியுள்ளது. காலையில் மதுரை, திருச்சியைத் தொடர்ந்து தற்போது கோவை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'ஹை ரிஸ்க்' நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் உள்ளிட்ட முழுமையான சோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிந்தும் வீட்டு கண்காணிப்பில் இருப்பார்கள். மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு தற்போது அவசியம் இல்லை.
தடுப்பூசி போடுவதில் நாட்டில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 78%, இரண்டாம் தவணை தடுப்பூசி 44% என்ற அளவில் உள்ளது. கோவை தடுப்பூசி போடுவதில் மாநிலத்தில் முதலாவதாக உள்ளது. டெங்குவிற்கு 617-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தடுப்பூசி போடுவதில் தமிழகம் ஒரு இயக்கமாகச் செயல்படு வருகிறது. தமிழக முதல்வரே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பொருளாதாரத்தில் பின் தங்கி வருபவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகப் பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை. 4-கோடி செலவில் உருவாக்கப்பட மரபணு சோதனை கூடமும் தமிழகத்தில் உள்ளது. ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர், செந்தில் வளவன், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர், டாக்டர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர், ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.