சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், மான் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட சிலர் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டுவெடிகளை பயன்படுத்துவதாக கோவை SP செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் கரட்டுமேடு கருப்பராயன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த செல்வம் (41) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வம் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.
பின்னர், கரட்டுமேடு பகுதியில் உள்ள செல்வம் (41) மற்றும் அவரது நண்பர் மனோகரன் (40) உள்ளிட்டோரின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டான 4 அவுட்டுக்காய்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாகி, 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடி மருந்து பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர், இருவர் மீதும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.