அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பார்வை படக்கூடிய முக்கியமான இடத்தில், போக்சோ சட்டத்தைப் பற்றியும், புகார் அளிக்க - உதவி எண் அடங்கிய பேனரை பள்ளி நிர்வாகம் வைக்க அரசு உத்தரவிட வலியுறுத்தல்.
கோவை: கோவையில் பள்ளி சிறுமியின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாமக இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தோம்.
போலீஸ் விசாரணையில் சிறுமி படித்த பள்ளியில் வேலை செய்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் சிறுமிக்கு அளித்த தொடர் பாலியல் தொல்லைகளால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து இருப்பது சற்று ஆறுதலை கொடுத்தாலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்வதே நியாயமாகும்.
பாமகவின் இரண்டு கோரிக்கைகள்:
1. உடனடியாக சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அனைவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
2 அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பார்வை படக்கூடிய முக்கியமான இடத்தில், போக்சோ சட்டத்தைப் பற்றியும், புகார் அளிக்க - உதவி எண் அடங்கிய பேனரை பள்ளி நிர்வாகம் கட்டாயமாக வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும்.
இந்த இரண்டு நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் இளைஞர்களை ஒன்று இரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.