கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
திருப்பூர் காசிபாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றவர் ராஜ பிரகாஷ். இவர் கடையில் விற்பனை தொகை 9 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக கடந்த ஒன்றாம் தேதி கடையிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே சென்ற போது அவரை வழிமறித்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.

பின்னர், இது குறித்து ராஜ பிரகாஷ் அளித்த புகாரையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, தீவிர விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், பவித்ரன், மணிகண்டன் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு இருசக்கர வாகனங்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.