பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தைப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டனர்.
திருப்பூர்: பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தைப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி நூலகத்திற்குப் புத்தகம் தேவை என்று விளம்பரம் அளிக்கப்பட்டது.
இந்த விளம்பரத்தைக் கண்டு தனிநபர் ஒருவர் தந்தை பெரியார் எழுதிய பெண்கள் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தைப் பள்ளி நூலகத்திற்கு, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி அவர்களிடம் வழங்கினார்.
அந்தப் புத்தகத்தைப் படிக்காமல் சில மாணவிகளுக்கு அந்த புத்தகம் வழங்கப்பட்டது, அந்த புத்தகத்தில் பெண்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஒருவனுக்கு ஒருத்தி என்பது அணிதி போன்ற தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளதுடன், இந்து மதத்தை இழிவாகவும், இந்து பெண்களைத் தரக்குறைவாகவும் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி விநியோகித்த புத்தகங்களைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற புத்தகங்களைப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கக்கூடாது என்றும் பாஜகவினர் தலைமை ஆசிரியையிடம் கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி தெரிவிக்கையில், ஒரு தனிநபர் நூலகத்திற்கு இந்த புத்தகங்களை வழங்கினார். அதைப் படிக்காமல் சில மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விநியோகித்த அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெறுவதாகவும் மீதமுள்ள அனைத்து புத்தகங்களையும் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பள்ளி பரபரப்பாகக் காணப்பட்டது.