கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் தொடர்பாக, பந்தய சாலை காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் தொடர்பாக, பந்தய சாலை காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச்சேர்ந்தவர்கள் பார்த்தீபன்(31), சக்திவேல்(60) முருகானந்தம்(55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
தென்காசியை சேர்ந்த முருகானந்தம் இப்பகுதியில் தங்கி சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். நண்பர்களான மூவரும் நேற்று தீபாவளி கொண்டாடுவதற்காக மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில் 6.30-மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். இதனையடுத்து, அருந்ததியர் வீதியிலுள்ள, பட்டத்தரசியம்மன் கோவில் எதிரே இருக்கும், பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3- பேரும் மது அருந்தியுள்ளனர்.
பின்னர் சக்திவேல் தனது வீட்டுக்குச் செல்ல கோவிலின் பின்புறம் வந்தவர், கீழே உட்கார்ந்தவர் இறந்துவிட்டார். இவரை தொடர்ந்து பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் இறந்துள்ளார்.
இருவரது உடல்களும் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், பார்த்தீபன் தனது வீட்டருகே இறந்துள்ளார். பின்னர் அவரது உடலும் பிரேதப்பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியில் உள்ள தடயங்களை எடுத்துச் சென்றனர்.

பந்தய சாலை காவல்துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.