கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய கார் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே, அந்த குடோன் உள்ள இடம் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய கார் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே, அந்த குடோன் உள்ள இடம் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இப்பகுதியில், குடியிருப்புகள் நடுவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான பழைய கார் குடோன் செயல்பட்டு வருகிறது.
இங்கு, பழைய கார்களின் உதிரி பாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பழைய கார்கள் அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தவிர, பழைய கார்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள், கழிவுகள் அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாகக் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த பழைய கார் குடோன் தீ பிடித்தது.

இந்த தீ விபத்தில் பழைய கார்கள், அதன் உதிரி பாகங்கள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கார் குடோன் அமைக்கப்பட்ட இடம் ஸ்கீம் சாலைக்கான இடம். மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம். இந்த இடம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், நடந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அந்த குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் விரைவில் வழங்கப்பட உள்ளது.
மேலும் அப்பகுதிகளில் இது போன்ற இடங்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் உள்ளனவா என கண்டறிந்து அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.