கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறிய கரடி மரத்தின் கிளையில் கை மாட்டிக் கொண்டதால் கீழே இறங்க முடியாமல் தவித்தநிலையில், வனத்துறையினர் கரடியை காப்பாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறிய கரடி மரத்தின் கிளையில் கை மாட்டிக் கொண்டதால் கீழே இறங்க முடியாமல் தவித்தநிலையில், வனத்துறையினர் கரடியை காப்பாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே இன்று வாட்டர்ஃபால் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி நின்று சத்தம் போடுவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
சில மணி நேரங்களாக மரத்தில் கரடி இருப்பதைக் கவனித்த பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்த்ததில் கரடி மரத்தின் மீது ஏறி அதன் கை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டதால் கரடி கீழே இறங்க முடியாமல் தவிப்பது தெரியவந்தது.
அதன்பிறகு வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கரடியை மரத்திலிருந்து காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தின் கீழ் தேயிலைத் தோட்டத்தில் மேலும் இரண்டு கரடிகள் சுற்றி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் கரடி அருகில் செல்லாமல் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை வால்பாறை சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் முனியாண்டி, மணிகண்டன், சக்திவேல், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கரடியைக் காப்பாற்ற மரத்தின் மேல் கயிறு கட்டி மரத்தை அடியோடு வெட்டி மரத்தைச் சாய்த்து கரடிக்கு வனத்துறை மருத்துவர் சுகுமார் மயக்க மருந்து செலுத்தி கரடியைப் பிடித்து பரிசோதனை செய்து கரடியின் இடது கையில் காயம் ஏற்பட்டு உள்ளதைக் கண்காணிக்க சிகிச்சை அளிக்க ரொட்டிகடை மனித வன தடுப்பு மோதல் மற்றும் வன விலங்குகள் சிகிச்சை மையத்திற்குக் கரடியைக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கையில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டபின் கரடியை வனப் பகுதியில் விடப்படும் என வனத்துறை தெரிவித்தனர்.