கோவை: கோவை மக்களுக்கு உதவும் விதமாக தனியார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நம்ம கோவை இணையதள பக்கத்தை துவங்கியுள்ளன.
கோவை: கோவை மக்களுக்கு உதவும் விதமாக தனியார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நம்ம கோவை இணையதள பக்கத்தை துவங்கியுள்ளன.
கோவையில் நம்ம கோவை குழு மூலம் ஏழை மக்கள், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நம்ம கோவை அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நம்ம கோவை அமைப்பும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நம்ம கோவைக்கான இணையதள பக்க தொடக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு இணையதள பக்கத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், தையல் இயந்திரங்கள், ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :
பல்வேறு காரணங்களால் அரசு திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய கால தாமதம் ஏற்படலாம். இந்த இணையதளம் நடைமுறை சிக்கல்களை சரி செய்து உரிய மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்க்க வழிவகுக்கும்.
நம் மாவட்டத்தில் உள்ள நல்ல உள்ளங்கள் இந்த முயற்சியை துவங்கியுள்ளனர். இதற்காக கடந்த 2 மாதங்களாக பல முறை ஆலோசனை நடத்திய பின்னர் தான் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பு இதில் உள்ளது. எவ்வித தேவைகள் வரும் போதும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியும். இந்த முயற்சி சிறப்பாக அமையும் போது பிற மாவட்டங்களிலும் இதனை செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் நம்ம கோவை அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.