கோவை: நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் தடுத்தது பாஜக தான் என்றும், எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்காமல் நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் மக்களுக்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சி.பி.எம் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் தடுத்தது பாஜக தான் என்றும், எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்காமல் நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் மக்களுக்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சி.பி.எம் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விவசாய விரோத சட்டங்கள், பெகாசஸ் மூலம் நாட்டு மக்களையே உளவு பார்ப்பது, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் சட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட மக்களுக்கு எதிரான செயல்களை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் மூலம் 10-நாட்கள் திண்ணை பிரச்சாரம் செய்வது.
செப்டம்பர் மாத இறுதியில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது.
23-வது மாநில மாநாடு மதுரையில் நடத்துவது என தீர்மானம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
மாநில அரசின் பல்வேறு அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாஜக தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் விதமாக மக்கள் ஆசி வழங்கும் யாத்திரை நடத்துகிறது. இதன் மூலம் மத உணர்வைத் தூண்டும் பாஜகவிற்குக் கண்டனம்.
தமிழக அரசு சிறு-குறு தொழில்களைப் பாதுகாக்கும் விதமாக ஆய்வுக் குழுவைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. உடனடியாக அந்த குழு தொழில்முனைவோர்களிடம் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மேயர் போன்ற தலைவர் பதவிகளை நேரடியாக மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் விதமாகச் சட்டத்திருத்தங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் கோவையில் இரண்டு நாள் நடைபெற்ற பொதுக்குழுவில் நிரைவேற்றபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியிலிருந்த பலர் மீது ஊழல் வழக்குகள் உள்ளது. உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டும் ஆகையால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கொடநாடு விவகாரம் புதியது கிடையாது. அவர்களிடம் முறையான மறு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக எல்.முருகன் மத்திய அமைச்சராவதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அது பாஜக தீர்மானம் செய்ய வேண்டிய விஷயம் இது தேவையில்லாத விவாதம். ஒரு சமூகத்தைப் பற்றிச் சொல்லியே தன்னை முன்னிறுத்துகிறார். இது ஒரு சாதி ரீதியாலான அரசியலுக்கு முனைப்புக் காட்டக்கூடாது. பாஜகவின் பாதுகாப்பில் தமிழகத்தில் அதிமுக மாறியிருப்பது என்பது வேதனை.
நாடாளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் 900 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மத்திய அரசின் வரவு செலவில் உள்ளது. அரசுக்கு மட்டுமே கிடைக்கும் அந்த செயலி மூலம் ஒட்டுக் கேட்கும் பணி அரசியல் விதிகளுக்கு எதிரானது.
நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் தடுத்தது பாஜக தான் எனவும் எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க வேண்டியது மத்திய அரசு, நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் மக்களுக்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறது.
15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வாகனம் பயன்படுத்தத்தக்கதல்ல என்பது கார்பரேட்களிடம் புது வாகனம் வாங்க வழிவகுக்கும் எனவும் பாரத பிரதமர் மோடி பிரதமராகச் செயல்படாமல் கார்பரேட் நிறுவனங்களின் ஒரு முகவராகச் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.