கோவை: சமீபத்தில் கோவையில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
கோவை: சமீபத்தில் கோவையில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
கோவையை பொறுத்தவரை, பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து, நகை, பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதை தடுக்கும் பொருட்டு, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை போலீசார் அதிகரித்தும், இந்த இடைவிடாது நடக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றும், அதிகாலை 4 மணி அளவில் கோவை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ், பகுதியில் வில்லா எனப்படும் தொடர் வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை அங்குள்ள 7 வீடுகளில் கொள்ளையர்கள் அவர்களது கைவரிசையை காட்டியுள்ளனர் அங்கு வசிக்கும் ரவிக்குமார், லாட்ஜ் உரிமையாளர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற எல்.ஐ.சி மேலாளர். வெங்கட், சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட 7 வீடுகளில் அனைவரும் வீட்டின் மேல் பகுதியில் உள்ள படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்ததை, சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டினுடைய பின்பக்க கதவை உடைத்து வீட்டின் கீழ் தளத்திற்கு சென்று பீரோவில் உள்ள பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து, மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வு மற்றும் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத சூழலில், கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
நெருக்கமாக உள்ள அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை போன சம்பவம் மதுக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.