கோவை: கோவை மாநகரில் புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் 30 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்களை இயக்கிய 35 பேருக்கு தலா ரூபாய் 400 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகரில் புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் 30 கிலோமீட்டருக்கு மேல் வாகனங்களை இயக்கிய 35 பேருக்கு தலா ரூபாய் 400 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவையில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சாலைகளில் வேகக்கட்டுப்பாட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை மாநகருக்குள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். காந்திபுரம் முதல் கணபதி வரையிலும், 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு, பாரதியார் ரோடு, சுக்வார் பேட்டை, கிராஸ்கட் ரோடு, முதல் அவிநாசி ரோடு மேம்பாலம் வரையிலும், வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரையிலும், 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கோவை மாநகரில் உள்ள சாலைகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை போக்குவரத்து போலீசார் கூறுகையில், ஸ்பீட் ரேடார் கன் என்று அழைக்கப்படும் வேகத்தை அளவிடும் நவீன கருவி மூலமாக வாகனங்களின் வேகத்தை கண்காணித்து 100 மீட்டர் தூரத்திலிருந்து போலீசார் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும். இதில் அதிவேகமாக சென்ற 35 பேருக்கு தலா 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.