கோவை: கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்ட விவகாரத்தில் சிறையில் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்ட விவகாரத்தில் சிறையில் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜா(32). இவருக்கு ஷீபா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் ராஜாவின் மனைவி பெண் குழந்தையை அழைத்து தனியாக சென்று விட்டார். ஏழாம் வகுப்பு பயிலும் மகன் சஞ்சய் தனது அத்தையான உமா மற்றும் பெரியம்மா ரீட்டா ஆகியோர் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுனராக சுரேஷ் ராஜா பணியாற்றி வந்தபோது, கடந்த ஜூன் மாதம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் பெற்று செப்டம்பர் மாதம் 23ம் தேதி ஜாமீன் நிறைவடைந்த நிலையில், அன்று மாலையே வேறொரு திருட்டு வழக்கில் சுரேஷ் ராஜாவை பந்தய சாலை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், நேற்று சிறையில் சுரேஷ் ராஜா தூக்கிட்டு தற்கொல செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட சிறைத்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, சிறை துறையினர் சுரேஷ் ராஜாவின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் ராஜாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவரது அத்தை மற்றும் பெரியம்மா ரீட்டா ஆகியோர் கூறுகையில், நேற்று மதியம் சிறைத்துறையினர் அழைத்து சுரேஷ் ராஜா உடல் நிலை சரியில்லாத காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறிய சிறிது நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்ததாக கூறினார்.
கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஜாமீனில் வெளி வந்த சுரேஷ் அன்று மாலையே பீளமேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டதாகவும், அவரது அலைபேசி அனைத்து வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர். சுரேஷ் ராஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த அவர்கள் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுரேஷ் ராஜாவின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நியமான விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறி அழைத்து சென்றனர்.