கோவை: கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை: கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி விலக வலியுறுத்தி, திமுக இளைஞரணி சார்பில், தமிழகம் முழுவதும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் முன்பும், பொறியியல் கல்லூரிகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதேபோல் கோவை ஜிசிடி பொறியியல் கல்லூரி முன்பு, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அப்போது, சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டபடி கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரியை முற்றுகையிட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்ததை தாண்டி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் காவல்துறை மற்றும் திமுகவினர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து இழுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், இளங்கோ, சபரி கார்த்திகேயன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.