கோவை: கோவையில் பஞ்சாலை அலுவலகத்தில் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கத்தினர் முயன்ற நிலையில், அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை: கோவையில் பஞ்சாலை அலுவலகத்தில் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கத்தினர் முயன்ற நிலையில், அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் உள்ளது. தமிழகத்தில் கோவையில் 5 ஆலைகளும், கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் தலா ஒரு ஆலை என 7 பஞ்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்த பஞ்சாலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆலைகள் மூடப்பட்டு தற்போது வரை ஆலைகள் திறக்கப்படவில்லை. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் பஞ்சாலைகளை அனைத்தையும் முழுமையாக இயக்கிட வேண்டும் தொழிலாளர்களுக்கு முழு நேர வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடியுடன் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, பஞ்சாலைகளை திறக்கும் வரை வீடு திரும்பா போராட்டம் நடத்தப்போவதாக கூறி முற்றுகையிட்டவர்களிடம் காவல் துறையினரும் மற்றும் தேசிய பஞ்சாலை கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வரும் 16ம் தேதி மதுரையில் மத்திய தொழிலாளர் இணை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாகவும் அதன் பின் ஆலைகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் 17ம் தேதிக்குள் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை எனில் மீண்டும் போராட்டம் நடத்த போவதாக கூறி தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.