கோவை: கோவை விமான நிலையம் தனியார்மயமாக்கல் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கோவை விமான நிலையம் தனியார்மயமாக்கல் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கியுள்ளது. மேலும் பல விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என கூறியுள்ளது. இரண்டாம் கட்ட பட்டியலில் தமிழகத்தின் திருச்சி விமான நிலையம் உள்ளது. கோவை விமான நிலையம் மூன்றாவது பட்டியலில் இருந்ததாகவும் ஆனால் சமீபத்தில் இரண்டாம் கட்ட பட்டியலில் கோவை மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தொழில்துறையினர். விமான நிலைய விரிவாக்கத் திட்டம் செயல்படுத்துவதில் காலதாமதம், ஓடுபாதை விரிவாக்கம் செய்வது, பாயிண்ட் ஆஃப் கால் பைலேட்ரல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத காரணத்தால் பல்வேறு உலக நாடுகளுக்கு விமானங்கள் இயக்க முடியாது என்பது உள்ளிட்ட தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதுடன் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் கீழ் வரக்கூடிய 7 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கும் எனக் கூறியுள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலைய தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டாம் கட்ட பட்டியலில் கோவை விமான நிலையம் சேர்க்கப்படவில்லை" என்றார். இரண்டாம் கட்டமோ, மூன்றாம் கட்டமோ, கோவை விமான நிலையம் தனியார்மயமாக்கல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது ஏர்போர்ட் வட்டாரங்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் சமீபகாலமாக அதிக அளவு பகிரப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.