கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்தனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்தனர்.
கோவை நகரில் அண்மைக்காலமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோவை மாநகர காவல் ஆணையருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து, மாநகரில் எங்கெங்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிங்காநல்லூர் SIHS காலனி பகுதியில் ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 18 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 750 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதனை கடைகளில் விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலராம், முல்லாராம் மற்றும் மகேந்திரா ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோவை நகரில் இதுபோன்று வேறு எங்காவது வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டு, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.