கோவை: தொழில்நிறுவனங்களுக்கு நிரந்தர இ-பாஸ் முறை மற்றும் வங்கி கடன்களை செலுத்த அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை கோவையில் தொழில்துறையினர் முன்வைத்துள்ளனர்.
கோவை: தொழில்நிறுவனங்களுக்கு நிரந்தர இ-பாஸ் முறை மற்றும் வங்கி கடன்களை செலுத்த அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை கோவையில் தொழில்துறையினர் முன்வைத்துள்ளனர்.

கோவையில் இன்று நடைபெற்ற தொழில் சார்ந்த மாவட்ட சிறு தொழில் சங்கம், கோவை இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, சைமா, கோ இந்தியா, டாப்மா, காட்மா, கோப்மா, கொடிசியா போன்ற தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ஜாயிண்ட் கவுண்சில் அசோசியேசன் ஆப் கோவை அமைப்பின் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கொடிசியா தலைவர், ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தொழிற்சாலைகள் தற்போது 50 சதவீதம் திறனுடன் தான் இயக்கப்பட்டு வருகிறது. சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து போன்ற பொது போக்குவரத்துகள் இன்னும் இயங்காத நிலையில், தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வங்கிகளில் அனைத்து வகையான கடன்களை, இ.எம்.ஐ போன்றவற்றை செலுத்தும் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை வங்கிகளில் இ.எம்.ஐ பிடிக்கக்கூடாது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளில் தொழிற்துறையினருக்கு ஒரே மாதிரி விதிமுறைகள் அமல்படுத்த வேண்டும்.
தொழிற்நிறுவனங்களில் வர்த்தகம் முழுமையாக செயல்பட புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். பொதுக்போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி பிடிப்பில் தள்ளுபடி வேண்டும்
நுகர்வு அதிகரிக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை திருத்தி அமைத்து, ஜி.எஸ்.டி பிடிப்பில் தள்ளுபடி வேண்டும். ஜி.எஸ்.டி தொகையை தொழில்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்படுத்திக்கொள்ள வகை செய்ய வேண்டும்.
7 ஏ பிரிவின் கீழ் பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ துறைகள் சிறு,.குறு மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. இதனை மத்திய அரசு அத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கோவை மாதிரியான தொழில்நிறுவனங்களுக்கு வங்கி கடன்கள் வழங்க ஒதுக்கப்பட்டுள்ள கடன் வரம்பு போதுமானதாக இல்லை. ரூ. 1000 கோடி நிதி வங்கி கடன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது போதுமானதாக இல்லை.
குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய மாநில அரசுகளின் உதவி வேண்டும்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயல்பான நிலைக்கு திரும்பவும், வளர்ச்சி பாதையை அடையவும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை, அதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வங்கிகள் மூலம் கொரோனா சிறப்பு கடன்கள் அளித்தனர். அது தொழிற் துறையினருக்கு மிகவும் கைக்கொடுத்தது.
தொழிற் நிறுவனங்களுக்கு நிரந்தர இ-பாஸ்
இபாஸ் முறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை. தொழிற் நிறுவனங்களுக்கு நிரந்தர இ-பாஸ் முறை தேவை. தொழிலாளர் எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பது குறித்து தினமும் எங்கள் தொழிற்நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை தரவும், தயாராக உள்ளோம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் தொழில்நிறுவனங்கள் இயங்க அனுமதி உள்ளது. அதற்கு தொழிலாளர்கள் வந்து செல்ல ஏதுவாக பாஸ் வழங்கப்பட வேண்டும்.
இ-பாஸ் முறைக்கு நிரந்தர தீர்வு தேவை. மாவட்ட நிர்வாகத்தினர் இ பாஸ் குறித்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களது வேலை பழுவை குறைக்க தொழிற்துறையினருக்கு நிரந்தர இ பாஸ் முறை தர வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்திற்கு ஏற்றவாறு இ-பாஸ் முறை மாறுப்படுகிறது. இதனை மத்திய அரசு சீர்படுத்தி தொழில்துறையினர் சென்று வர ஏதுவாக எளிமைப்படுத்த வேண்டும்.
கோவை முதல் சேலம் வரை தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். அப்போது தமிழகத்தின் ஜி.டி.பி வளர்ச்சியடையும். இந்த கொரோனா காலத்தில், இத்திட்டம் செயல்படுத்தினால் பொருளாதாரம் ரீதியாக மிகவும் பயன் உள்ளதாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது காட்மா அமைப்பின் தலைவர் சிவகுமார், கோப்மா தலைவர் மணிராஜ், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமி நாராயணசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.