கோவை: கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலின் கூரையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலின் கூரையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை டவுன்ஹால் ஃபைவ் கார்னர் பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இந்த கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த உக்கடம் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், கோவிலின் கூரையில் மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுந்தராபுரம் பகுதியில் நேற்று பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும் முன், கோவில் முகப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, கோவை இரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் மற்றும் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.