ஊரடங்கு கால, அநியாய மின்கட்டணத்தை குறைக்கக் கோரி வரும் 21ம் தேதி அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கோவை: “வீட்டை விட்டு வெளியே போனால் அபராதம்”, “வீட்டிற்குள்ளே இருந்தால் அநியாய மின்கட்டணமா?” ஊரடங்கு கால, அநியாய மின்கட்டணத்தை குறைக்கக் கோரி, வருகின்ற, 21ம் தேதி அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், நேற்று (16-07-2020), காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் “தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அதிக மின்கட்டணத்தை, எல்லாத் தரப்பிலும் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்காமல், அனைத்துத் தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள அ.தி.மு.க. அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்கக் கோரியும், குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை” கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும், வரும் 21-7-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராட வேண்டும்“ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கு கிணங்க, கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட , மாநகர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள், நகர் நல சங்க நிர்வாகிகள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இந்தப் போராட்ட நோக்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, வருகின்ற 21-7-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று, காலை 10 மணிக்கு தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, அவரவர் இல்லத்தின் முன்பு, கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, அதிமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராட வேண்டும் என்றும் “இரக்கமற்ற அதிமுக அரசின் இதயத்தை வேகமாகத் தட்டி எழுப்புவதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்” என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.