கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதாக அந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பெரியார் ஆதரவாளர்களுக்கும், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து, இன்று கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட, கோவையில் உள்ள மூன்று முக்கிய சிலைகளில் ஒன்றாக இருந்து இருக்கிறது.
திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலையின் முன்பு பல்வேறு விதமான போராட்டங்களும், பகுத்தறிவு சார்ந்த சிந்தனை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறுவது வழக்கம்.
இப்படியிருக்க, சமூக விரோதிகள் சிலர் பெரியாரின் சிலை மீது காவி சாயம் பூசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தகவல் அறிந்த பெரியார் தொண்டர்கள் இன்று காலை அந்த பகுதியில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, திராவிடர் கழகம், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலை முன்பு உடனடியாக சாயம் பூசிய நபரை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மேலும், தமிழகத்தில் இது போன்ற ஒரு அசம்பாவிதம் எங்கு நடந்தாலும் மிகப்பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் பெரியார் தொண்டர்கள் எச்சரித்தனர்.
பின்னர், குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு கலைந்து சென்றனர்.

திராவிட ஆதரவாளர்களில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருப்பர் கூட்டம் குழுவினரை கண்டித்திருந்தனர் என்பதும், மேலும், பாஜாக வினர் பலர் முருக வழிபாடு செய்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.