கோவை: கோவை ராக்கிபாளையத்தில் உள்ள பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் நான்கு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை: கோவை ராக்கிபாளையத்தில் உள்ள பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் நான்கு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தொற்று பரவுவதை தடுக்க தனிமைப்படுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொற்று உறுதியாகும் பொழுது அந்த நிறுவனம் மற்றும் அதை சார்ந்த தொடர்புகள் பூட்டப்படுகிறது.
இந்நிலையில், கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையத்தில் எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரியின் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவன குழுமத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதியில் தங்கி வேலை செய்து வரும் ஆண் ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாக தெரியவந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தொடர்ந்து விடுதியில் அவருடன் தங்கியிருந்த 9 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து ராக்கிபாளையம் எமரால்டு நிறுவனமும் அருகில் இருந்த அதன் கிளை நிறுவனமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல், விடுதியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்தி இருக்கும்படி சுகாதாரத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.