கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு அருகே 3 மாத குழந்தையை அருகே உள்ளவரிடம் சிறிது நேரம் வைத்திருக்க சொல்லி விட்டுச் சென்ற தாய் மீண்டும் வராததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு அருகே 3 மாத குழந்தையை அருகே உள்ளவரிடம் சிறிது நேரம் வைத்திருக்க சொல்லி விட்டுச் சென்ற தாய் மீண்டும் வராததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய் சேய் குழந்தைகள் நலப் பிரிவிற்கு பிரசவத்திற்காக கோவை உட்பட நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் சுமார் பன்னிரண்டரை மணியளவில் மூன்று மாத கைக்குழந்தையுடன் வந்த தாய் அருகே இருந்த பெண்ணிடம் தான் கழிப்பிடம் சென்று வந்து குழந்தையை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் குழந்தையை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.
ஆனால், மூன்று முப்பது மணி வரை குழந்தையின் தாய் வராததால் சந்தேகமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்று புகார் அளித்தனர். இந்த நிலையில், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நிர்வாகத்தினர் குழந்தையை தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைதொடர்ந்து பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 மாத குழந்தை தாயின்றி அழும் நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.