கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பலி எண்ணிக்கைகள் குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்த தொற்றினால் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தவர்கள் பலியாவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது.
இதனால் வயது முதிர்ந்தவர்கள் வெளியே வருவதை தவிர்க்க தொடர்ந்து சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் கோவை மாவட்டத்தில் சிறியவர், பெரியவர் என பாகுபாடின்றி பல தரப்பினரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று காலை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை 24 வீரபாண்டி பிரிவு வி.கே.வி.நகரை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 2ம் தேதி இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவரது குடும்பத்தார்களான தொடர்பில் இருந்த மகன், மகள் உள்பட 4 பேருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், முதியவரின் உடல்நிலை நேற்று முதலே மோசமானதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ளது.