கோவை: கொரோனா தொற்று காரணமாக கோவை செல்வபுரம், செட்டி வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தங்க பட்டறைகளை நாளை முதல் மூட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா தொற்று காரணமாக கோவை செல்வபுரம் பகுதியில் செயல்படும் தங்க பட்டறைகளை நாளை முதல் மூட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை செல்வபுரத்தில் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்ப்பட்ட குடியிருப்பு வாசிகளை பரிசோதனை செய்ததில், நூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோவை செல்வபுரம், செட்டி வீதி, தெலுங்கு பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தங்க பட்டறைகளை நாளை முதல் மூட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கோவை மாவட்டத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் தங்க பட்டறை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தங்கம் உள்ளிட்ட பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள 2 நாட்கள் அவகாசம் அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.