கோவை: கொரோனா பரவலை காரணம் காட்டி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கொரோனா பரவலை காரணம் காட்டி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஃபோரம் பார் ஐடி எம்ப்ளாயீஸ் என்ற ஐடி தொழிற்சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காலகட்டத்தில் ஐடி நிறுவனங்கள் கட்டாய ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கோவை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வரும் சி.டி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பாரதிதாசன் என்பவர் மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா பரவலை காரணம் காட்டி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டு இருந்தது. மேலும் ஊழியர்களை நேரங்காலம் இன்றி வேலை வாங்குவதாகவும் தெரிவித்தார். கோவை சிடிஎஸ் நிறுவனத்தில் 12 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், கொரோனா தொற்றை காரணம் காட்டி ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் சிடிஎஸ் நிறுவனம் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியும் வெளியேற வற்புறுத்தியும் சி.டி.எஸ் நிறுவனம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளதாக தெரிவித்தார். சி.டி.எஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை மற்றும் தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறை மற்றும் தமிழக அரசு ஐடி தொழிலாளர்களின் பணியை உறுதி செய்து வாழ்வாதாரத்தை காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.